புதிய கொரோனா மாறுபாடு... மூன்றில் ஒருவருக்கு சிக்கல்: பிரித்தானிய அரசு ஆலோசகர்களின் பகீர் தகவல்
கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டுவரும் நிலையில், உருவாகும் புதிய மாறுபாடானது தீவிர உயிர்க்கொல்லியாக இருக்கும் என பிரித்தானியா அரசின் ஆலோசகர்கள் குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய கொரோனா மாறுபாடானது பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றில் ஒருவர் இறக்க நேரிடும் என்றே அரசு ஆலோசகர்கள் குழுவினர் எச்சரிக்கின்றனர்.
மட்டுமின்றி, தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகளால் போதிய பலனும் இருக்காது என்றே கூறுகின்றனர். ஆனால், பிரித்தானியாவில் தடுப்பூசி திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், புதிய மாறுபாடின் தாக்கம் குறையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பூஸ்டர் டோஸ் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடும் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடும் ஒன்றிணைந்து புதிய மாறுபாடாக உருவாகும் நிலை ஏற்பட்டால், அது மிக ஆபத்தான மாறுபாடாக மாறும் என்றே கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரையான தடுப்பூசிகள் முழுமையான பாதுகாப்பை அளிக்காத நிலையில், புதிய மாறுபாடானது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பது தடுக்க முடியாத ஒன்று என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி பிரித்தானியா தனது விடுதலையை அறிவித்திருப்பது கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையின் போது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெளியாகியுள்ள புதிய அறிக்கை, பிரித்தானியா அரசாங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, நாம் இன்னும் கொரோனா பெருந்தொற்றை வென்றுவிடவில்லை என்றே பிரித்தானியா அரசு ஆலோசகர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.