கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கேப்டன் கோஹ்லி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அனைவரும் முடிந்தவரை விரைவாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்லுமாறு கோஹ்லி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. ஆகையால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோஹ்லி கொரோனா வைரஸுக்கு எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோஹ்லி கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்.
அவர்கள் முதற்கட்டமாக ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கினர். இரண்டாம் கட்டமாக அடுத்த 24 மணி நேரத்தில் ரூ. 3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி விராட் கோஹ்லி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.