சுடுகாட்டில் பாதி எரிந்த பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிஸ்! கணவன், தாய் கைது - நடந்தது என்ன?
கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் சென்ற பெண்ணை, அவரது தாயும் கணவனும் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழக மாவட்டம் தேனியில், உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் குடும்பம் நடத்தச் சென்ற பெண்ணை, கொலை செய்தது தொடர்பாக அப்பெண்ணின் தாய், கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் சடலத்தை உறவினர்கள் மயானத்தில் எரிக்க முயன்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவர, அவரது உறவினர்களிடம் பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் ரஞ்சிதாவிற்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன், அந்த நபருடன் சென்றதால், குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, ரஞ்சிதாவை அவரது தாய் கவிதா, கணவர் கல்யாணகுமார் உள்ளிட்ட மூவர் கொலை செய்தது தெரியவந்தது.