வனத்துறை அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல்.., லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரொக்கம் பறிமுதல்
இந்திய மாநிலமான ஒடிசா, ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக பணியாற்றி வருபவர் ராமா சந்திர நேபக். இவருடைய மாத வருமானம் ரூ.76,880 ஆகும்.
ஆனால், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை பொலிஸார் அதிகாரிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, ஒன்றரை கிலோ தங்க நகைகள், 4 தங்க பிஸ்கெட்டுகள், 16 தங்க நாணயங்கள், 5 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், "எனது மனைவி மற்றும் மகனின் வருமானத்தில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளேன். எனது மகனின் திருமணத்தின்போது பலரும் தங்க நகைகளை அன்பளிப்பாக வழங்கினர். நான் லஞ்சம் வாங்கவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |