அதிவேக T20 சதமடித்த உர்வில் படேலுக்கு அழைப்பு விடுத்துள்ள CSK
28 பந்துகளில் சதமடித்த உர்வில் படேல் உள்ளிட்ட 3 வீரர்களை திறன் பரிசோதனைக்கு CSK அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில், சென்னை அணி இதுவரை 10போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வென்று, 8 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் அதிரடியாக விளையாட கூடிய வீரர்களை சென்னை அணி வாங்காததாலே, தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், தொடர்ச்சியாக புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து விளையாட வாய்ப்பளிக்கிறது.
சமீபத்திய போட்டிகளில், ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை களமிறங்கியது. அதை தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த வீரர்களை திறன் பரிசோதனைக்கு அழைத்துள்ளது.
உர்வில் படேல்
முன்னதாக, ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது விக்கெட் கீப்பரான கார்த்திக் சர்மா என்பவரை திறன் பரிசோதனைக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான உர்வில் படேல் உள்ளிட்ட 3 வீரர்களை திறன் பரிசோதனைக்காக அழைத்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த உர்வில் படேல், 20 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 41ஓட்டங்களையும், 2 வது வாய்ப்பில் 20 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் அரை சதமும் அடித்ததாக கூறப்படுகிறது.
2024-25 சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில், திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை. இதனையடுத்து, 2025 ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.
மேலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த அமன் கான், திறன் பரிசோதனையில், 2 சிக்ஸர்களை அடித்தார். 2022-2023 ஐபிஎல் தொடர்களில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் இடம் பெற்றுள்ளார்.
இதே போல் கேரளாவை சேர்ந்த துடுப்பாட்டகாரரான சல்மான் நிசாரும் திறன் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் கேரள அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |