மொயீன் அலி, ஜடேஜா அசத்தல்... ராஜஸ்தானை துவம்சம் செய்து சென்னை அபார வெற்றி
அசத்திய பந்துவீச்சாளர்களால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
சென்னைக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ருத்துராஜ் மீண்டும் சொதப்ப 10 ஓட்டங்களில் வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் 33 ஓட்டங்களிலும், மொயீன் அலி 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ஓட்டங்கள் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.
ஆனால் சென்னை அணியினர் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினர். அதனால் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழுந்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்புடன் ஆடி 49 ஓட்டங்கள் சேர்த்தார். எஞ்சிய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.
கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவும், ஜெய்தேவ் உனத்கட்டும் போராடினர். இருவரும் இணைந்து 42 ஓட்டங்கள் சேர்த்தனர். டெவாட்டியா 20 ஓட்டங்களில் வெளியேற உனத்கட் 24 ஓட்டங்களில் சுருண்டார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.