கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
சபரிவர்மன் மரணம்
கன்னியாகுமரி மாவட்டதில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

கடந்த 13 ஆம் தேதி அவருக்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை பெற குடும்பத்தினர், மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதல் தகவல் அறிக்கை ஜூன் 9 ஆம் தேதி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சபரிவர்மனின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.
கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம். தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை 11 பாக்கெட்டுகள் என 192 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்
இதன் பின்னர், சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் முன் வந்தனர்.
இதனை நிராகரித்த குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
உடற்கூறாய்வு அறிக்கை
சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கொடூரமான தாக்குதலால் அவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், "சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறியது. தலையின் மேற்பகுதி, கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள், சிராய்ப்பு காயங்கள் இருந்தது மூளை, அதன் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்தது.
இது பொதுவாக மூச்சு திணறல் அல்லது கடும் போராட்டத்தின் போது ஏற்படும் அறிகுறி. சபரிவர்மனின் உடல் உறுப்பு மாதிரிகள், திசுக்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்ளது. கை, காலில் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |