பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது ட்ரோன் தாக்குதல்: தயார் நிலையில் போர் விமானங்கள்
பிரித்தானியாவின் விமானப் படை தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது தாக்குதல்
சைப்ரஸில்(Cyprus) அமைந்துள்ள பிரித்தானியாவின் மிக முக்கியமான ராணுவ மையமான RAF அக்ரோட்டிரி(RAF Akritiri) பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது ட்ரோன்கள் மூலம் திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதலை தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் விமான ஓடுபாதை சிதைக்கப்பட்ட போதிலும், இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 1986ம் ஆண்டுக்கு பிறகு RAF அக்ரோட்டிரி(RAF Akritiri) பிரிட்டிஷ் விமானப்படை தளம் முதல் முறையாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
நள்ளிரவில் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, விமானப்படை தளத்தில் தங்கியிருந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பத்திரமாக மாற்று இடங்களுக்கு வெளியேற்றினர்.

மேலும் தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த F-35 ரக மின்னல் போர் விமானங்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ரேடார் அமைப்புகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் தயார் நிலை, தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே என்றும், வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு முன்னதாகவே மத்திய தரைக்கடல் பகுதியில் பிரித்தானிய ராணுவம் தங்களுடைய பலத்தை அதிகரிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |