இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்
பிரித்தானியா அமைத்துள்ள இரண்டு இராணுவத் தளங்களை மூட வேண்டும் என்று கோரி சைப்ரஸ் தலைநகரின் தெருக்களில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்து பேரணி நடத்தியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தில் ஆழ்த்திவிட்டன
கடந்த ஞாயிறன்று சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள பிரித்தானியாவின் இராணுவ தளம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இது சைப்ரஸ் மக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திவிட்டன என்ற அச்சத்தின் காரணமாக ஆர்ப்பாட்டங்களும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Limassol துறைமுகத்தில் இன்று ஜேர்மன் போர்க்கப்பலான FGS நோர்ட்ரெய்னின் வருகையை அடுத்து மக்களின் கோபம் அதிகரித்துள்ளது.
நேற்று Nicosia நகரில் குவிந்த திரளான மக்கள் பிரித்தானியா தளங்களை மூடுக என்ற முழக்கங்களுடன், சைப்ரஸ் நாடு உங்களின் போருக்கான ஏவுதளமல்ல என்ற வாசகங்களுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
சைப்ரஸ் மக்களின் இந்த பேரணியானது ஜனாதிபதி மாளிகை வரையில் நீடித்தது. நாட்டின் முக்கியமான இரண்டு அமைப்புகள் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்திருந்தனர்.
ஏகாதிபத்திய திட்டங்களுடனான சைப்ரஸ் அரசாங்கத்தின் அதிகரித்து வரும் தொடர்பு, குடியிருப்பாளர்களை ஆபத்தான மற்றும் அழிவுகரமான பாதையில் கொண்டு செல்கிறது என்றும் இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சைப்ரஸின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் (அக்ரோதிரி மற்றும் டெகெலியா) அமைந்துள்ள இரண்டு இராணுவத் தளங்கள் அந்த நாட்டை போருக்கான ஏவுதளமாக பயன்படுத்த கட்டாயப்படுத்துகிறது என்று இரு அமைப்புகளும் வாதிட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டை போருக்கான ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூட்டு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
சைப்ரஸ் முழுவதும் சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான பிரித்தானிய எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன, இதில் இந்த வார தொடக்கத்தில் லிமாசோல் நகரில் நடந்த ஆர்ப்பாட்டமும் அடங்கும்.

ஈரான் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், RAF தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் சைப்ரஸில் பதட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. RAF தளத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில்,
தீவிர விசாரணைக்குப் பின்னர் அந்த ட்ரோன் தாக்குதல் ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படவில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருந்தார்.
முதன்மையான இலக்காக
ஆனால், தாக்குதல் எங்கிருந்து முன்னெடுக்கப்பட்டது, அந்த ட்ரோன் யாருக்கு சொந்தமானது என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துள்ளார்.

RAF தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் எந்த உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை, மட்டுமின்றி குறைந்தபட்ச சேதத்தையே ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் திங்களன்று சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் மேலும் இரண்டு ட்ரோன்கள் அத்துமீறிய நிலையில் இடைமறிக்கப்பட்டதாக சைப்ரஸ் அரசாங்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அந்த ட்ரோன் தாக்குதல் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளால் லெபனானில் இருந்து ஏவப்பட்டது என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க U-2 உளவு விமானங்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியின் போது RAF அக்ரோதிரி தளமும் முதன்மையான இலக்காக மாறியுள்ளது.
இதனையடுத்து, சைப்ரஸில் உள்ள போராட்டக்காரர்கள், பிரித்தானியா தங்கள் தளங்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக விமர்சித்துள்ளனர், எனவே அந்த தளங்களை சைப்ரஸ் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |