கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலம்: உடைந்து நொறுங்கிய இளம் தந்தை
பிரித்தானியாவின் வால்சால் பகுதியில் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தைப் பார்த்து மொத்தமாக உடைந்து நொறுங்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பல்பொருள் அங்காடியில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் வால்சால் பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் அந்த அதிர்ச்சி சம்பவத்தை 27 வயதான லீ கோல்ஸ் பார்த்துள்ளார்.
ஒரு குழந்தைக்கு தந்தையான லீ கோல்ஸ் முதலில், அது ஒரு பொம்மை என்றே கருதியுள்ளார். ஆனால் அதன் உண்மை என்னவென்று தெரிந்து கொண்ட லீ கோல்ஸ் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பொலிசார் தற்போது, பிறந்து சில நாட்களேயான பிஞ்சு குழந்தை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும், குழந்தையின் தாயார் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
இதனிடையே, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த குழந்தையானது நான்கு நாட்கள் வரை கால்வாய் தண்ணீரில் கிடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கால்வாயில் அந்த குழந்தையின் பிஞ்சு கால்கள் மற்றும் கைகளையே தாம் முதன் முதலில் பார்த்ததாக லீ கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து சில நிமிடங்கள் என்னால் மீள முடியவில்லை, என்னால் அங்கிருந்து நகரவே முடியவில்லை, நான் நினைவிழந்து அங்கேயே விழுந்துவிடுவேனோ என அஞ்சினேன் என லீ கோல்ஸ் கண் கலங்கியுள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து வீட்டுக்கு திரும்பியதும், எனது மகனை அள்ளி அணைத்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்துள்ளார் லீ கோல்ஸ்.