சார்லஸ் மன்னரின் மருத்துவ ஆவணங்கள்... கேட் மிடில்டன் விவகாரத்தை அடுத்து அளிக்கப்பட்ட விளக்கம்
லண்டன் மருத்துவமனை ஒன்றில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் கசிந்த விவகாரம் புயலைக்கிளப்பிய நிலையில், சார்லஸ் மன்னர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் பத்திரம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தனியுரிமை மீறலில் ஈடுபட்ட விவகாரத்தில், மருத்துவமனை ஊழியர்கள் மூவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேட் மிடில்டன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஜனவரி 29ம் திகதிக்கு பின்னரே அவரது மருத்துவ ஆவணங்களில் தனியுரிமை மீறல் நடந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது புற்றுநோய் தொடர்பான சிகிச்சையில் இருந்துவரும் சார்லஸ் மன்னரும் ஜனவரி மாதம் அதே லண்டன் மருத்துவமனையில் மூன்று நாட்கள் செலவிட்டிருந்தார் என்பதுடன், புரோஸ்டேட்டுக்கான சிகிச்சையும் பெற்றிருந்தார்.
மேலும் ஜனவரி 29ம் திகதி சில மணி நேர இடைவெளியில் மன்னரும் இளவரசி கேட் மிடில்டனும் லண்டன் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், மன்னரின் மருத்துவ ஆவணங்கள் பத்திரமாக உள்ளது என்றும், கேட் மிடில்டன் தொடர்பான ஆவணங்களே அத்துமீறப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கையை சிதைக்க
இதனிடையே, கேட் மிடில்டன் விவகாரம் தொடர்பில் புதன்கிழமை விளக்கமளித்துள்ள லண்டன் மருத்துவமனை, பொருத்தமான அனைத்து விசாரணை, ஒழுங்குமுறை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் இந்த அத்துமீறலுக்கு எதிராக எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
மேலும், எங்கள் நோயாளிகள் அல்லது சக ஊழியர்களின் நம்பிக்கையை சிதைக்க வேண்டுமென்றே தனியுரிமையை மீறுபவர்களுக்கு எங்கள் மருத்துவமனையில் இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய மருத்துவமனையில் கேட் மிடில்டன் 13 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் வெளியேறியதை அடுத்தே ஊழியர்கள் மூவர் கேட் மிடில்டன் தொடர்பான ஆவணங்களை வேவு பார்த்துள்ளனர்.
ஜனவரி 16ம் திகதி லண்டன் மருத்துவமனையில் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.