ஒவ்வொருமுறை அவர்கள் தனியாக பயணப்படும் போதும் கவலைப்படுகிறேன்: மகள்கள் குறித்து மிச்செல் ஒபாமா உருக்கம்
சமீப காலமாக அமெரிக்காவை சூழ்ந்துள்ள இனவாத வன்முறைகள் காரணமாக , தனது மகள்கள் தனியாக காரில் செல்வது தமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தும் என மிச்செல் ஒபாமா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல், அமெரிக்காவின் சமீப கால இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மனம் திறந்துள்ளார்.
தமது இரண்டு மகள்கள் மாலியா (22) மற்றும் சாஷா (19) தொடர்பில், மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளதாகவும், தனியாக வாகனத்தில் செல்லும் அவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் குறித்து எதுவும் தெரியாத நபர்களால் அசம்பாவிதம் ஏற்படாது என உறுதி கூற முடியவில்லை என கண்கலங்கியுள்ளார்.
காவல்துறையினருடன் சந்திப்பதால் தனது மகள்களைப் பற்றி கவலைப்படுவதாக மிச்செல் ஒபாமா வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதல்கள் சாலை போக்குவரத்து நேரங்களில் கண்டிப்பாக நிகழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் கருப்பின இளைஞர் ஒருவர் இதேப்போன்று பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட காரணம் விசித்திரமாக இருந்தது மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
மட்டுமின்றி பொலிஸ் விசாரணையின்போதே ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டார். அதுவே உலக நாடுகள் பலவற்றில் இனவாத மோதல்களுக்கு அறுதி கட்டவேண்டும் என்ற போராட்டத்திற்கு காரணமானது.
பெரும்பாலான கருப்பின மக்கள் தற்போது பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். நாய் உடன் தெருவில் நடந்து செல்லவே பயப்படுகின்றனர் அல்லது சாரதிக்கான உரிமம் வாங்க தங்களது பிள்ளைகளை அனுப்பவே பெற்றோர்கள் பயப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார் மிச்செல் ஒபாமா.
இந்த விவகாரம் தொடர்பில் நாம் துணிந்து, அடிக்கடி பேச வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.