இங்கிலாந்திலுள்ள சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தோர் மையத்தில் ஒருவர் மரணம்
இங்கிலாந்திலுள்ள, சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தோர் பரிசீலனை மையம் ஒன்றில் ஒருவர் மரணமடைந்துள்ள விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் ஒருவர் மரணம்
இங்கிலாந்தின் கென்டிலுள்ள Manston என்னும் கிராமத்தில் புலம்பெயர்ந்தோர் பரிசீலனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை அவர் மரணமடைந்ததாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் கடந்த 12ஆம் திகதிதான் சிறு படகு ஒன்றில் பிரித்தானியாவை வந்தடைந்தவர் ஆவார்.
ஏற்கனவே பல முறை எச்சரித்த தொண்டு நிறுவனங்கள்
இதற்கிடையில், அந்த புலம்பெயர்ந்தோரின் மரணம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Inquest என்னும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரான Deborah Coles என்பவர், Manston புலம்பெயர்ந்தோர் மையத்தின் மோசமான நிலை குறித்தும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் மீது அதனால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான தாக்கம் தொடர்பில் தொடர்ந்து பலமுறை பலமுறை எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த புலம்பெயர்ந்தோரின் மரணம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்படவேண்டும் என Inquest தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
1,000 முதல் 1,600 பேர் வரை மட்டுமே தங்கக்கூடிய வசதி கொண்ட Manston புலம்பெயர்ந்தோர் மையத்தில், 4,000 பேர் வரை தங்கவைக்கப்பட்ட விடயம் சமீபத்தில் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
PA MEDIA