கங்கை ஆற்றின் மணலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பிணங்கள்! ஆற்றில் மிதந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி
பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களின் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்த நிலையில், தற்போது இரண்டு இடங்களில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் இறப்பும் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இதனால் கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பீகாரில் கங்கை ஆற்றில் பிணங்களாக மிதந்து வந்தன. கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்கள் உடல்களாக இருக்கலாம் என பீகார் மக்கள் பீதியடைந்தனர்.
பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என பீகார் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்குள் உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் கங்கை ஆற்றின் கரையோரம் மணலில் ஏராளமான உடல்களை புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
புதைக்கப்பட்ட இடம் மூன்று மாவட்டங்களின் முக்கியமான இடம் என்று உயர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில் ‘‘சிலர் இறந்தவர்களின் உடல்களை எரிக்கமாட்டார்கள்.
ஆனால், கங்கை ஆற்றின் மணலில் புதைப்பார்கள். எனக்கு தகவல் கிடைத்த பிறகு, அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்றார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா? என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.