இதுவே முதல் முறை! கொரோனா ஆராய்ச்சிக்காக உடல் தானம்
மனித உடலில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக 94 வயது மூதாட்டியின் உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1927ம் ஆண்டு வங்கதேசத்திலுள்ள சிட்டகாங்க் பகுதியில் பிறந்தவர் ஜோத்ஸ்னா போஸ், இவரின் தந்தை, இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவிலிருந்து திரும்பிவந்தபோது, வழியில் தவறிவிட்டதால், இவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளது.
எனவே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜோத்ஸ்னா போஸ் உயிரிழந்துள்ளார், இவரது உடலை மருத்துவ ஆராய்ச்சியாக தானமாக வழங்கியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
இதுகுறித்து ஜோத்ஸ்னா போஸின் பேத்தி கூறுகையில், நான் நோயியல் துறையில் முதுகலை படிக்கிறேன். கொரோனா முற்றிலும் புதிய நோய் என்பதால், எங்களைப் போன்ற பலருக்கும் இதன் தன்மை பற்றி விரிவாக தெரியாது.
இது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாங்கள் தெரிந்துக்கொள்ள, இதுபற்றி நாங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் புரிதல் வரும். அந்த ஆய்வுக்கு, நோயியல் பிரேத பரிசோதனை எங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.