80,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... அஞ்சலி செலுத்திய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள 80,000 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை தேசிய நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் (Angela Merkel) மற்றும் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் (Frank-Walter Steinmeier) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு தலைவர்களும் முதலில் கைசர் வில்ஹெல்ம் நினைவு தேவாலயத்தில் காலை முன்னெடுக்கப்பட்ட ஆராதனைகளில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தலைநகர் பெர்லினில் முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜேர்மன் முழுவதும் குறித்த நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பேசிய ஜனாதிபதி ஸ்டெய்ன்மியர், வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், தொற்றுநோயால் ஏற்பட்ட மனித இழப்பாக அனைவரும் இதை கருத வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மேலும், உற்றார் உறவினர்களுக்கு உரிய இறுதி மரியாதை கூட செய்ய முடியாத சூழல் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இறுதி நாட்களில் உறவினர்களை நெருங்கிய சொந்தங்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்,
மட்டுமின்றி, உரிய முறையில் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கவும் முடியாமல் போயிருக்கலாம், அவர்கள் அனைவரும் தனியாக அல்ல, அவர்களின் துக்கத்தில் இந்த நாடு பங்கேற்கிறது என்றார்.
ஜேர்மனியில் கொரோனா மூன்றாவது அலையால் இன்னும் பலர் மரணமடைய கூடும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜேர்மனியில் தீவிர சிகிச்சை பிரிவு மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும், 15 முதல் 49 வயதுடையவர்களை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.