2022 மார்ச் 15தான் கடைசி நாள்... ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் விதித்துள்ள கெடு!
ஜேர்மன் சுகாதாரத்துறை பணியாளர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு 2022 மார்ச் 15தான் கடைசி நாள் என, ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் கெடு விதித்துள்ளார்.
ஜேர்மனியில், சுகாதாரப் பணியாளர்களுக்கும், முதியோர் இல்லங்களில் பணி செய்வோருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க புதிய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த முடிவை சட்டமாக்குவதற்கான வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெற உள்ளது.
பொதுமக்களின் நலனையும், எளிதில் பாதிக்கப்பட்டக்கூடியவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில், சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுவோர் ஒன்றில் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டிருக்கவேண்டும் அல்லது மருத்துவ காரணங்களால் தங்களால் தடுப்பூசி பெற இயலாது என்பதைக் காட்டும் ஆதாரம் வைத்திருக்கவேண்டும் என அந்த சட்ட வரைவு (draft of the law) தெரிவிக்கிறது.
அதன் பொருள் என்னவென்றால், மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவிப் பணியாளர் அல்லது முதியோர் இல்லப் பணியாளர் முதலானோர், 2022 மார்ச் 15க்குள் தாங்கள் கொரோன தடுப்பூசி பெற்றதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தை தாங்கள் பணி புரியும் இடத்தில் சமர்ப்பித்தாகவேண்டும்.
அத்துடன், மருத்துவ காரணங்களால் அவர்களால் தடுப்பூசி பெற இயலாது என்றால், தங்களால் எதனால் கொரோனா தடுப்பூசி பெற இயலாது என்ற காரணத்தை விளக்கும் மருத்துவர் அளித்துள்ள அதிகாரப்பூர்வ ஆதாரத்தைப் பெற்றிருக்கவேண்டும்.
அத்துடன், மார்ச் 16க்குப் பிறகு புதிதாக பணியைத் துவங்கும் யாரானாலும், அவர்களிடம் கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் இருக்கவேண்டும் என்கிறது அந்த சட்ட வரைவு.
இந்த விதி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது, அவர்களுடன் உதவிக்கு நிற்கும் அலுவலர்கள், அவசர சேவைப் பணிகளிலிருப்போர் ஆகியோருக்கும் பொருந்தும்.
இந்த விதியைப் பின்பற்றாதவர்கள் தங்கள் பணியை இழக்க நேரிடலாம்!