உலகம் முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை வெளியானது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் இதுவரை எதிர்கொண்டிராத நோய்த்தொற்றின் மிக உயர்ந்த விகிதத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்த மறுநாளே இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மொத்தமாக புரட்டிப் போட்டுள்ள நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 230,000 பேர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.
அதிக பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் கவலையை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளவில், கடந்த இரண்டு மாதங்களில் வாரத்திற்கு புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக அளவில் தொற்றுநோய் பாதிப்பைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளுக்கு 12,000 இறப்புகள் உலகளவில் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் உலகளாவிய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் பல நாடுகளில் உண்மையான எண்ணிக்கையை முழுமையாக பிரதிபலிக்காது என்றே கூறப்படுகிறது.