இந்திய பிரபலத்தை திவாலானவராக அறிவித்தது லண்டன் நீதிமன்றம்
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் திங்கள்கிழமை திவால் உத்தரவு பிறப்பித்தது.
இப்போது செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக உலகளாவிய முடக்க உத்தரவைப் பின்பற்றுவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான இந்திய வங்கிகளின் கூட்டமைப்புக்கு இது வழி வகுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 3.42 மணியளவில் நீதிபதி Michael Briggs தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தற்போது பிணையில் இருக்கும் 65 வயதான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாடுகடத்தப்படும் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் புகலிடக்கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பினார்.
இந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை லண்டன் பொலிசார் கைது செய்தனர். மேலும் அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதையடுத்து பிரித்தானியா அரசும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.