டிராவிட் என்னிடம் முதலில் இதைத் தான் கேட்டார்! இலங்கை தொடர் குறித்து முதன் முறையாக பேசிய தீபக் சஹார்
இலங்கை சென்ற போது, இந்திய அணியின் பயிற்ச்சியாளராக இருந்த டிராவிட் தன்னிடம் என்ன கேட்டார் என்பதை தீபக் சஹார் கூறியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் இருந்த போது, ஷிகார் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை இந்தியாவும், டி20 தொடரை இலங்கையும் கைப்பற்றியது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு பயிற்ச்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார்.
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அடைந்தவுடன் டிராவிட் தன்னிடம் முதலில் என்ன கேட்டார் என்பதை தீபக் சஹார் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
நாங்கள் இலங்கைக்கு சென்றவுடன், டிராவிட்டை சந்தித்தோம். அப்போது அவர் என்னிடம் முதலில் என் வயதைப் பற்றி தான் கேட்டார். நானும் இப்போது 28 விரைவில் 29 வயது ஆகப் போகிறது சார் என்று கூறினேன்.
உடனே அவரும் இது உங்கள் உண்மையான வயதா? இல்லை கிரிக்கெட்டிற்காக மாற்றப்பட்ட வயதா? என்று விளையாட்டுத் தனமாக கேட்டார். நான் அவரிடம் இது என்னுடைய அசல் வயது தான், ஏனெனில் என்னுடைய அப்பா விமானப்படையில் இருந்ததால், இந்த வயதை எல்லாம் மாற்ற முடியவில்லை என்று கூறியதாக குறிப்பிட்டார்.
மேலும், டிராவிட் இளைஞர் மீது அதிக நம்பிக்கை வைப்பர். அவர் என் மீது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எப்போதும் என்னை ஒரு டெஸ்ட் பந்து வீச்சாளராகவே கருதுகிறார்.
அதையும் தாண்டி, இந்தியா ஏ அணிக்காக என்னை சிவப்பு பந்து போட்டிகளுக்கு தேர்வு செய்துள்ளார்.
நான் அவருக்கு கீழ் விளையாடிய போதெல்லாம், நான் எப்போதும் பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டேன். எனது திறனை அவர் நன்கு அறிவார் என்று கூறி முடித்தார்.