தைவானைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு: சீனாவுக்கு எதிராக ஜோ பைடன் வெளிப்படை
தைவான் மீது சீனா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்கா கண்டிப்பாக பாதுகாப்பளிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் அமெரிக்காவின் நீண்டகால கொள்கை மீறல் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட, வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
அதில், தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா உதவும் ஆனால் தாக்குதல் நடந்தால் தைவானின் உதவிக்கு வருவதாக வெளிப்படையாக உறுதியளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவை பொறுத்தமட்டில் அமைதியான முறையில் தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ள இருப்பதாகவே சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் தைவான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது என்னவென்றால், தங்களுக்கு சீனா உடன் இணைய விருப்பம் இல்லை என்பது தான்.
ஒரு சுதந்திர ஜனநாயகம் என்ற அந்தஸ்தைத் தக்கவைக்கவே விரும்புவதாகவும் தைவான் தெரிவித்துள்ளது. தைவான் தொடர்பிலான விவகாரத்தில் சில நாடுகள் ஆதாயம் பார்ப்பதாக, அமெரிக்காவை குறிவைத்து சீனா குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு போர் சூழலில் தைவானை தள்ளுவது என்பது யாருக்கும் விருப்பம் இல்லாத ஒன்று என்றே சீனா குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், மறைமுகமாக தைவான் எல்லையில் சீனா தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தியும் வருகிறது.
தைவானுக்கு ஆதரவாக ஜோ பைடன் கடந்த ஆகஸ்ட் மாதமும் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்கா எப்போதும் தங்கள் முக்கிய நேச நாடுகளை பாதுகாக்கும் எனவும் அதில் தைவானும் விதிவிலக்கல்ல என்றார்.
மட்டுமின்றி, கனடா மற்றும் ஐரோப்பாவில் நேட்டோ நேச நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா ஒரு புனிதமான உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக ஜோ பைடன் கூறியிருந்தார், அது 'ஜப்பானுடனும், தென் கொரியாவுடனும் ஏற்பட்டுள்ளதைப் போன்று தைவானுடனும் இருக்கும் என்றார்.