வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்: ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேறியுள்ளது சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துருப்புகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
நாங்கள் அதை விரைவில் தொடங்கியிருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதனை முன்பு செய்திருந்தால், அது அவசரம் அல்லது உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்திருக்கும்.
சவால்கள், அச்சுறுத்தல்கள் இல்லாமல் போரின் முடிவில் இருந்து வெளியேற்றம் என்பது சாத்தியம் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு பொதுமக்கள், ராணுவ ஆலோசகர்கள், சேவைத் தலைவர்கள் மற்றும் களத்தில் தளபதிகளின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் அமைந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றத்தின் வெற்றிக்கு எங்கள் ராணுவத்தின் தன்னலமற்ற தைரியம் காரணமாக இருந்தது. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு சேவை செய்தனர். போர் நோக்கத்தில் அல்ல, கருணையின் நோக்கத்தில். வரலாற்றில் இதை எந்த தேசமும் செய்யவில்லை, அதை அமெரிக்கா மட்டுமே செய்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சரியான மற்றும் புத்திசாலித்தனமான சிறந்த முடிவு என்று நான் நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் போர் தற்போது முடிந்துவிட்டது. இந்த போரை எப்படி முடிப்பது என்று இந்த பிரச்சினையை எதிர்கொண்ட 4-வது ஜனாதிபதி நான்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று அமெரிக்க மக்களுக்கு நான் உறுதி அளித்திருந்தேன், தற்போது அதை நான் நிருபித்தேன் என்றார் ஜோ பைடன்.
ஆகஸ்ட் 31ம் திகதி வெளியேறுவது தன்னிச்சையான காலக்கெடுவால் அல்ல, இது அமெரிக்க உயிர்களைக் காப்பாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது, முன்னாள் ஜனாதிபதி மே 1ம் திகதிக்குள் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற தாலிபான்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
அமெரிக்காவிற்கு தீங்கு செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது எங்களுக்கு எதிராகவோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராகவோ பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு, அமெரிக்கா ஒருபோதும் அடிபணியாது என்பதை இந்த தருணத்தில் நான் தெளிவாக கூறுகிறேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.