டெல்லி தீ விபத்து திட்டமிட்ட சதி: 3 பேர் உயிரிழந்தது விபத்து இல்லை: பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி
டெல்லி தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் தீ விபத்து
டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பங்கஜ், சுசீலா தேவி, சோனியா குமாரி ஆகிய 3 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவம் விபத்தாக கருதப்பட்ட நிலையில், தற்போது இது திட்டமிட்ட தீ வைப்பு சம்பவம் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்து தொடர்பாக அடுக்கு மாடி கட்டிடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 17 வயது சிறுமி ஒருவர் கட்டிடத்திற்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரித்ததில், ஜூன் 12ம் திகதி நள்ளிரவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நின்ற ஸ்கூட்டருக்கு தான் தீ வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
சிறுமியை தூண்டி விட்ட பெண்
சிறுமியிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் சரிதா என்ற பெண் இந்த 17 வயது சிறுமியை தூண்டிவிட்டுள்ளார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசிக்கும் தீபக் என்பவரை குறிவைக்குமாறு குறிப்பிட்டு அவரே சிறுமிக்கு பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

உறவினர்களான நிரஞ்சன் என்பவருக்கும் தீபக் என்பவருக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை தகராறே இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் நிரஞ்சன் என்பவர் வேறொரு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து நிரஞ்சன்(33), ராஜ்குமார்(27), சரிதா(27) மற்றும் 17 வயது சிறுமி ஆகிய நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |