பக்கத்துவீட்டு பெண்ணை 3 துண்டுகளாக வெட்டி வீசிவிட்டு தலைமறைவான கணவன்-மனைவி! வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்
டெல்லியில் கடனை திருப்பிக் கேட்ட பக்கத்து வீட்டு பெண்ணை, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 30-ஆம் திகதி நடந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இறந்து போன பெண் கவிதா (72) டெல்லியில் நஜாப்கர் (Najafgarh) பகுதியில் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். கவிதாவிடம் அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் அணில் ஆர்யா என்பவர் ரூ. 1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், நீண்ட காலமாக அவர் அதை திருப்பி கொடுக்காததால், கவிதா பணத்தை தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ஆம் திகதி மாலை, வாங்கிய கடனை உடனே திருப்பி கொடுக்கும்படி ஆர்யாவிடம் கவிதா கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆர்யா அந்த வயதான பெண்ணை முகத்தில் குத்தி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு, அணில் ஆர்யா மற்றும் அவரது மனைவி தணு இருவரும் சேர்ந்து, கவிதாவின் உடலை 3 துண்டுகளாக வெட்டி, மூன்று பைகளில் நிரப்பி, நஜாப்கரில் உள்ள ஒரு வடிகாலில் எறிந்துள்ளனர். மேலும் அன்று இரவோடு இரவாக, கவிதாவின் வீட்டில் இரத்தக் கறைகளை சுத்தம் செய்துவிட்டு, தம்பதியினர் தலைமறைவாக்கினர். மேலும், கவிதா அணிந்திருந்த நகைகளை ஒரு அடகு கடையில் 70,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜுலி -ஆம் திகதி கவிதாவின் மருமகள் தனது அத்தையை காணவில்லை என்றும் அவரது வீடு பூட்டி இருப்பதாகவும் பொலிஸில் புகார் அளித்தார். பிறகு ஜூலை 7-ஆம் திகதி மீண்டும் காவல் நிலையத்துக்கு சென்று, தனது அத்தையின் பக்கத்து வீட்டாரும் சில நாட்களாக காணவில்லை என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கவிதாவின் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் சோதனை செய்ததில், ஜூலை 1-ஆம் திகதி காலை ஆர்யா தம்பதியினர் சில பெரிய பைகளுடன் வேகமாக காரில் கிளம்பியதை கண்டு பொலிஸார் சந்தேகமடைந்தனர்.
இந்தநிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்யா மற்றும் அவரது மனைவி தணு இருவரும் உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரித்தபோது உண்மைகள் வெளிவந்தன. கவிதாவின் உடல் பாகங்களையும் பொலிஸார் கால்வாயிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.