டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை - எப்படி சாத்தியம்? என்ன பயன்?
டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் செயற்கை மழை
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவது ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை குறைக்க அரசு தரப்பில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் காற்று மாசு குறையவில்லை.
இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க, செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மேக விதைப்பு மூலம், ஜூலை 4 முதல் 11 ஆம் திகதி வரை செயற்கை மழை பொழிய வைக்கப்பட உள்ளது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
இதற்கான செயல்பாடுகளை கான்பூர் ஐஐடி, புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளது.
இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 90 நிமிடங்களுக்கு, 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்த மேகவிதைப்பு நடைபெற உள்ளது.
மேக விதைப்பு
மேகவிதைப்பு என்பது, வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, ட்ரை ஐஸ் அல்லது உப்பு போன்ற ரசாயனங்களை மேகங்களின் மீது தூவி, மழையை தூண்டும் ஒரு செயல்முறையாகும்.
வறட்சியைச் சமாளிக்க, மூடுபனியை அகற்ற, காற்றின் தரத்தை மேம்படுத்த, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழை மேகங்கள் இருக்கும்போது மட்டுமே இதை செயல்படுத்த முடியும். விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது தரையில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேக விதைப்பை மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம், மழையின் அளவை 5 முதல் 15 சதவீதம் அதிகரிக்க முடியும். இதனால் சில மணி நேரம் முதல் சில நாட்களுக்கே மட்டுமே காற்றின் தரத்தை அதிகரிக்க முடியும்.
அதேவேளையில், வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்ற காற்று மாசுபாட்டின் மூலங்களை இந்த செயற்கை மழை அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |