நாளை முதல் சென்னை சாலையோரங்களில் ஏசி ஓய்வறை - யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
சென்னை சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு ஏசி ஓய்வறைகள் நாளை திறக்கப்பட உள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சியடைந்த பின்னர், டெலிவரி ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
உணவு தொடங்கி மளிகை பொருட்கள் உடை என அனைத்தையும் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து, வீட்டு வாசலில் நின்று பெற்று விட முடியும்.
டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை
சென்னை போன்ற பெரு நகரங்களில், நாளின் 24 மணி நேரமும் டெலிவரி ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த டெலிவரி ஊழியர்களில் 10% பெண்கள் ஆவார்கள்.
குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், மழை, கடும் வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
பனியின் இடையே ஓய்வு எடுக்க கூட இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூட வேண்டிய நிலை உள்ளது.
இவர்கள் பணியின் இடையே ஓய்வெடுப்பதற்காக, இணைய தொழிலாளர்கள் ஓய்வுக்கூடம் என்ற பெயரில், சென்னையின் சாலை ஓரங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
600 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறையில், கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளது.
மேலும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ஓய்வறையை பயன்படுத்த முடியும் என்றும், 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அண்ணா நகர் மற்றும் கே.கே.நகரில் நாளை இந்த ஓய்வறைகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தபட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |