பறக்கும் விமானத்தில் கதவை உடைக்க முயன்ற நபர்! அமெரிக்காவில் நடந்த பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஒருவர் விமான கதவை உடைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெல்டா என்ற விமானம் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து நாஷ்வில் நகரத்துக்கு நேற்று பயணித்து கொண்டிருந்தது.
அப்போது பெயர் குறிப்பிடப்படாத பயணி ஒருவர், திடீரென விமானத்தை நிறுத்தச் சொல்லி தொடர்ந்து கத்திக்கொண்டே, விமான கதவை திறக்க முயன்றார்.
இதனால் மற்ற பயணிகளும் விமான குழுவினரும் பதற்றம் அடைந்தனர். விமான குழுவினர் என்ன சொல்லியும் கேட்காத அந்த நபர், ஒரு கட்டத்தில் விமான கதவை உடைத்து திறக்க முயன்றுள்ளார்.
அப்போது, பயணிகள் சிலருடன் சேர்ந்த விமான குழுவினர் அந்த நபரைத் தாக்கி தரையில் வீழ்த்தி, கைகள் மற்றும் கால்களை கட்டினர். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் அல்புகுவர்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும், மற்ற பயணிகள் 5 மணி நேரம் கழித்து வேறொரு விமானத்தின் மூலம் நாஷ்வில் நகரத்துக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.