மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிய 'டெல்டா' - அந்தோனி பாசி எச்சரிக்கை
அமெரிக்க கோவிட் -19 முயற்சிகளுக்கு டெல்டா வைரஸ் 'மிகப்பெரிய அச்சுறுத்தல்' என்று டாக்டர் அந்தோனி பாசி எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 டெல்டா வைரஸ், இப்போது அமெரிக்காவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் CDC செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து, நேற்று மாலை வெள்ளை மாளிகையின் மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி "கோவிட் -19 தொற்றிலிருந்து முழுமையாக வெளியேறும் அமெரிக்காவின் முயற்சிக்கு தற்போது டெல்டா மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று எச்சரித்தார்.
இருப்பினும் ஒரு "நல்ல செய்தி என்னவென்றால், நம்மிடம் இருக்கும் தடுப்பூசிகள் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகின்றன" என்பது தான் என்கிறார்.
மேலும் பேசிய பாசி, மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகள் தான், நாட்டில் வைரஸை அழிக்கும் முயற்சிக்கு முக்கிய தடையாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் அயோவா, கன்சாஸ், மிசௌரி, நெப்ராஸ்கா, கொலராடோ, மொன்டானா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, உட்டா மற்றும் வயோமிங் ஆகிய இடங்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானர்கள் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருவதால், 18 முதல் 26 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அரசு வலியுறுத்துகிறது.