அச்சுறுத்தும் ஜூலை... மிக மோசமான சூழலை எதிர்நோக்கும் பிரித்தானியா: எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நாளுக்கு 100,000 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடானது தற்போது பிரித்தானியாவில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால், 9 நாட்களுக்கு ஒருமுறை பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 21 முதல் கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தது, இன்னும் தாமதமாகலாம் என்றே நம்பப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக வெளியேறும் நடவடிக்கை ஜூலை 19ல் அறிவிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.
டெல்டா மாறுபாடு காரணமாக நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும், மருத்துவமனையை நாடுபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக பிரதமர் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் எனவும் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 7,738 பிரித்தானியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 90% பேர்களும் டெல்டா மாறுபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
டெல்டா மாறுபாடு பிரித்தானியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இன்னும் ஒரு மாதத்தில், நாளுக்கு 100,000 பாதிப்புகள் உறுதி செய்யப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வரும் நாட்களில் தங்கள் தடுப்பூசிகளை பெற உள்ளனர். பிரித்தானியா முழுமையும் இதுவரை 70,741,984 டோஸ் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 29,450,653 என தெரிய வந்துள்ளது.