அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இனி பயன்பாட்டில் இல்லை: மொத்தமாக தடை விதித்த முதல் நாடு
இரத்தம் உறைவு பிரச்சனையில் தொடர்பு இருப்பதாக கூறி, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிப்பதை டென்மார்க் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் ஐரோப்பிய மருந்து கண்காணிப்பு குழுவும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பரிந்துரைத்துவரும் நிலையில், முதல் நாடாக டென்மார்க் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்புக் குழு கடந்த வாரம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் மிகவும் அரிதான இரத்த உறைவு பாதிப்புகளுக்கும் இடையில் தொடர்பைக் கண்டறிந்ததாகக் கூறியது.
ஆனால், கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதத்தை ஒப்பிடுகையில், தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளானது மிக மிக குறைவு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி எடுத்துக் கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு என தெரிவித்தது. இந்த நிலையில் டென்மார்க் சுகாதார நிறுவனத்தின் தலைவர் சோரன் ப்ரோஸ்ட்ரோம்,
இரத்த உறைவு பற்றிய விசாரணைகளின் முடிவுகள் உண்மையான மற்றும் தீவிரமான பக்க விளைவுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த கருத்தின் அடிப்படையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தடுப்பூசி திட்டத்தை தொடரவே முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஐரோப்பிய நாடுகள் பல தடுப்பூசி விநியோகத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் திணறி வருகிறது. மட்டுமின்றி, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிப்பதை ஜேர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
பிரான்ஸ் 55 வயதுக்கு உட்பட்டவர்களிக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. மேலும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட இளையோர்களை பைஸர் அல்லது மாடர்னாவின் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக எடுத்துக் கொள்ள ஜேர்மனியும் பிரான்சும் பரிந்துரைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் வயது வந்தோரில் வெறும் 19.4 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.