140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய லஹிரு உதராவை இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா பாராட்டினார்.
தனஞ்செய டி சில்வா
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
முதல் டெஸ்டினை வென்றிருந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா (Dhananjaya de Silva), "கடந்த முறையை விட விக்கெட் வறண்டு இருந்தது. நான்காவது இன்னிங்ஸும் என் மனதில் இருந்தது. அதனால், முதலில் துடுப்பாட்டம் செய்ய எடுத்த முடிவு ஒரு நல்ல முடிவு என்று நான் நினைக்கிறேன்.
லஹிரு உதரா முதல் போட்டியில் விளையாடவில்லை, மேலும் அவர் சில ஓட்டங்களை எடுக்கவும், அந்த அணியில் மீண்டும் இடம்பிடிக்கவும் ஆர்வமாக இருந்தார். அவர் அணியில் இடம்பெறத் தகுதியானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.
விளையாடும் தளம் அவ்வளவாக சுழலவில்லை. மேலும், 140-145 வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் எங்களிடம் இல்லை. ஆனால், எடுத்த ஓட்டங்கள் போதுமானவை என்று நான் நினைத்தேன்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் வீட்டிற்கு சென்று அதை மறுமதிப்பீடு செய்வோம். வெளிப்படையாக, ஒரு போட்டியில் வெற்றிபெற 20 விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதுதான் இந்தத் தொடரில் இருந்து கற்றுக்கொண்டது.
நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது என் மனதில் இருக்கும் ஒரே விடயம் அதுதான். அதற்கு, நான் முன்பே கூறியது போல், எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய அந்த X-factor நம்மிடம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |