CSK-வோட பலமே இது தான்! அதான் ஜெயிக்க முடியுது: 10 ஆண்டு ரகசியத்தை உடைத்த டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, தங்கள் அணியின் பலம் என்ன என்பது குறித்து ஹைதராபாத் அணியுடனான வெற்றிக்கு பின் கூறியுள்ளார்.
ஐபிஎல் துவங்கியதில் இருந்தே சென்னை அணியின் தலைவராக டோனி இருக்கிறார். அதுமட்டுமின்றி அந்தணியிலும், அப்போதில் இருக்கும் பல வீரர்களும் இப்போது வரை உள்ளனர்.
இதனால் கடந்த மோசமான தோல்விகளை சந்தித்த சென்னை, கடும் விமர்சனத்திற்குள்ளானது. இருப்பினும் டோனி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், ஒரு சில வீரர்களை மட்டும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு, அமைதியாக இருந்தார்.
இதனால் மீண்டும் சென்னை மீது விமர்சனம் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்திற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் மிரட்டி வருகிறது.
இதுவரை விளையாடியுள்ள சென்னை அணி 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின் டோனி கூறுகையில், கடந்த ஆண்டு சென்னை அணிக்கு இருந்த பிரச்சனை இந்த வருடம் இல்லை. அந்த அளவிற்கு சிறப்பாக துவக்க வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு செட்டிலான அணியை கொண்டுள்ளதால் எங்களால் சிறப்பாக விளையாட முடிகிறது.
கடந்த 8 முதல் 10 வருடங்களாக நாங்கள் அணியில் பெரிதாக வீரர்களை மாற்றவில்லை அதனால் நாங்கள் எதிர் கொள்ளும் விதம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்கிறது.
அதனால் நாங்கள் ஒரு அணியாக இந்த தொடரில் வெற்றிகளை பெற்று வருகிறோம். வீரர்களும் அதிகளவு போட்டியை விளையாடி உள்ளனர். அதுமட்டுமின்றி விளையாடாமல் வெளியில் இருக்கும் வீரர்களும் நல்ல மனநிலையில் உள்ளனர்.
வாய்ப்பு கிடைக்கும்போது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஆரோக்கியமான நிலையும் எங்களது அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைகிறது என கூறியுள்ளார்.