டோனி அன்று கொடுத்த டிப்ஸ் தான் காரணம்! கடைசி பந்தில் சிக்ஸர் விளாசிய ஷாருக்கான் பகிர்ந்த தகவல்
இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்து தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்த ஷாருக்கான் அதன் ரகசியத்தை இப்போது கூறியுள்ளார்.
இந்தியாவில் மாநில அணிகளுக்கிடையே நடைபெறும் 20 ஓவர் கொண்ட சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் கடந்த 4-ஆம் திகதி துவங்கி, 22-ஆம் திகதி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் கர்நாடகாவுடன் மோதிய தமிழ்நாடு அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தமிழக அணிக்கு கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, அந்தணி வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர் என 33 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரின்போது டோனியிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் ஒரு பினிஷர் ரோல் என்றால் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கி கூறினார்.
குறிப்பாக, களத்தில் நாம் செய்வது தான் சரி என்று நான் நம்பும் அளவிற்கு என்னிடம் எடுத்து சொன்னார். ஏனெனில் ஆட்டத்தின் போக்கை களத்தில் நிற்கும் போது கணிப்பவர் நாம் தான், அதனால் நாம் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதும் இலக்கை விரட்டும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பதையும் நாம் தான் சரியாக புரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக கூறினார்.
அவர் அன்று கூறிய அறிவுரையின் படியே நான், இந்த இறுதிப் போட்டியில் எந்த ஒரு பதட்டமும் இன்றி, சேஸிங்கை மனதில் வைத்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஷாருக்கான கூறியுள்ளார்.