CSK போட்டியில் தனி ஒருவனாக போராடிய தமிழன் ஷாருக்கானை அழைத்து பேசிய டோனி! வைரலாகும் புகைப்படம்
பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பின் டோனி, தமிழக வீரர் ஷாருக்கானை அழைத்து பேசிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணியை, சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை பறிகொடுத்து, பஞ்சாப் அணி திணறிக் கொண்டிருந்த போது, அந்தணி வீரரும், தமிழக வீரருமான ஷாருக்கான தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 36 பந்தில் 47 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் மிகவும் மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணி, நூறு ஓட்டங்களை கடந்து, இறுதியில் 106 ஓட்டங்களை எடுத்தது.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, ஷாருக்கானை அழைத்த டோனி, அவரை தன் அருகில் அமர வைத்து நீண்ட நேரம் பேசினார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, அப்படி இருவரும் என்ன தான் பேசியிருப்பார்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது.
தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. ஷாருக்கான ஒரு அதிரடி வீரராக இருப்பதால், டோனி அவரிடம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது எவ்வாறு பேட்டிங் பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், போட்டியை எவ்வாறு முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், ஒரு பவர்ஹிட்டராக எந்த நேரத்தில் எவ்வாறும் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.