குறைந்த வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு தான் அதிகம்! கவனம் தேவை
சர்க்கரை நோய் என்பது ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினையாக இருந்தது. ஆனால் தற்போதைய காலக்கட்டதில் குறைந்த வயதினரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது.
சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.
40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது, ஏனெனில் இவர்களுக்கு தான் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. புரோட்டின் உணவுகளையும் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்தல், உடற்பயிற்சி செய்தல், எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
இதனால் உங்களது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளுக்கு குட் பை சொன்னால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது..!!