அது மட்டும் நடக்கவில்லையென்றால் இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருப்பார்: பகீர் குற்றச்சாட்டு
இளவரசி டயானாவின் மரணத்துக்கு காரணம், பிரித்தானிய அரசியல்வாதிகள் சிலர்தான் என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அவரது முன்னாள் சாரதியான ஒருவர்.
1997ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி, இளவரசி டயானா தனது காதலர் டோடி ஃபயத் உடன் பிரான்சில் தங்கியிருந்தபோதுதான், பாரீஸில் அவர் கார் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.
ஆனால், டயானா 28ஆம் திகதியே லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், அப்படி அவர் திட்டமிட்டபடி அன்றே லண்டன் திரும்பியிருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என்றும் அதிரவைக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் அவரது முன்னாள் சாரதியான Colin Tebbutt.
அதாவது, இளவரசி டயானா, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடையுடன் அங்கோலா நாட்டிலுள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடம் ஒன்றில் நிற்கும் புகைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.
கண்ணி வெடிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உடனடியாக கண்ணி வெடிகள் அகற்றப்படவேண்டும் என குரல் கொடுத்தார்.
பிரித்தானியாவின் கண்ணி வெடிகள் குறித்த கொள்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு இந்த விடயத்தில் உருப்படியாக எதையும் செய்யவில்லை, இப்போதிருக்கும் லேபர் அரசு மிகச்சிறப்பாக இந்த விடயத்தைக் கையாளும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார் டயானா. இந்த விடயம் கன்சர்வேடிவ் கட்சியினரை எரிச்சலூட்டவே, அவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.
பிரான்சிலிருந்து டயானா ஆகத்து மாதம் 28ஆம் திகதி லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், தான் லண்டன் திரும்பினால் தன்னுடன் சண்டையிட கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதிகள் தயாராக இருப்பதை அறிந்துகொண்ட டயானா, அதைத் தவிர்ப்பதற்காகவே அன்று லண்டன் புறப்படாமல், ஆகத்து மாதம் 31ஆம் திகதி வரை பிரான்சிலேயே தாமதித்தார்.
அவர் திட்டமிட்டபடி 28ஆம் திகதி லண்டன் திரும்பியிருந்தால், அவர் உயிருடன் இருந்திருக்கக்கூடும் என்கிறார் அவரது முன்னாள் சாரதியான Colin Tebbutt.