ஜேர்மனி பெருவெள்ள பேரழிவுக்கு இது தான் காரணம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
ஜேர்மனியில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புக்கு மக்கள் தொடர்பு குளறுபடிகளே காரணம் என கூறப்படுகிறது.
ஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், 170கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கனமழைக்கும் சில நாட்கள் முன்னரே இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் பொதுமக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் உரிய நேரத்தில் குறித்த தகவல்கள் சென்றடையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
பெடரல் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை, அதன் தலைவர் Armin Schuster உறுதி செய்துள்ளார். மொத்தமாக 150 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்றே Armin Schuster குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும், எந்த இடங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அரை மணி நேரத்திற்கு முன்னால் கணிக்க இயலாது என்றார் அவர்.
இதனிடையே, தொலைத்தொடர்பு முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கை செயலிகளால் என்ன பயன் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் திங்களன்று விஜயம் செய்த நிலையில், எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறனைப் பற்றிய பேச்சுக்களும் எழுந்துள்ளன.
இதனிடையே, Steinbach அணைக்கு அருகாமையில் உள்ள 4,500 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். Steinbach அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என கூறப்படுகிறது.