அமெரிக்க முன்னாள் அமைச்சர் காலின் பவுல் கொரோனா தொற்றுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் பவுல் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2001-2005ம் ஆண்டுகளில் குடியரசு கட்சியின் ஜனாதிபதியாக ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சியின் போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் காலின்பவுல்.
கறுப்பினத்தவரான காலின்பவுல், அமெரிக்க ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். மட்டுமின்றி 20ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை வகுப்பதில் இவரது பங்கு முக்கியமானது.
ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், அவரது ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் காலின் பவுல் பொறுப்பு வகித்துள்ளார்.
1990 காலகட்டத்தில் புகழில் உச்சியில் இருந்த காலின் பவுல், அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றே கூறப்பட்டது.
ஆனால் ஈராக் மீதான அமெரிக்காவின் போருக்காக தவறான தகவல்களை ஐக்கிய நாடுகள் மன்றம் முன்னிலையில் சமர்ப்பித்த காரணங்களால் நாளடைவில் அவரது புகழ் சரிவடைந்தது.
அதன் பிறகு காலின் பவுல் ஜனாதிபதி வேட்பாளர்கள் வரிசையில் இடம்பெறாமல் ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 84 வயதாகும் காலின் பவுல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வால்டர்ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளனர்.