திருமண உறவில் 50 ஆண்டுகள்... 12 மணி நேர இடைவெளியில் தம்பதிக்கு ஏற்பட்ட துயரம்
திருமணம் முடித்து 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒன்று கொரோனாவால் 12 மணி நேர இடைவெளியில் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் Auchtermuchty பகுதியை சேர்ந்த தம்பதியே 12 மணி நேர இடைவெளியில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
73 வயதான தமது கணவர் ஜான் கொரோனாவில் பலியானதை அடுத்து, தமக்கான அனைத்து மருத்துவ சிகிச்சையையும் நிராகரித்துள்ளார் 71 வயதான May Cropley.
கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதை கருத்தில் கொண்டு இருவரும் முழுமையாக தடுப்பூசியும் எடுத்துக்கொண்டிருந்தனர். இருவரும் ஒன்றாக இணைந்தே தொழில் நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக இருவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதனிடையே, ஜான் சிகிச்சை பலனின்றி மரணமடைய, அடுத்த 12 மணி நேரத்திற்குள் May Cropley மரணமடைந்துள்ளார். இருவருக்கும் முதுமை தொடர்பான நோய்கள் இருந்துள்ளது.
மட்டுமின்றி, 2009ல் இருந்தே May Cropley புற்றுநோயால் அவதிப்பட்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இருவருக்கும் ஒன்றாகவே இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.