சின்னதாய் தலைவலி... முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான பிரித்தானிய இளைஞர் மரணம்
பொறியாளரும் ஆரோக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவருமான 27 வயது இளைஞர் ஆஸ்ட்ராசெனகா தடுபூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
27 வயதேயான ஜாக் லாஸ்ட், ஏப்ரல் 20ம் திகதி செவ்வாயன்று கேம்பிரிட்ஜில் உள்ள ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் காலமானார்.
சின்னதாய் தலைவலி என மருத்துவமனையை நாடிய ஜாக் லாஸ்ட், 11 நாட்களுக்கு பிறகு மரணமடைந்துள்ளார்.
சஃபோல்க் பகுதியை சேர்ந்த பொறியாளராக பணியாற்றி வந்த ஜாக் லாஸ்ட், தமது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவர்.
மட்டுமின்றி, இதுவரை நோயால் படுத்ததில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பளித்தபோது, அவர் வியப்பில் ஆழ்ந்ததுடன் தமக்கு அது தேவையா என கேள்வி எழுப்பியுள்ளாராம்.
இருப்பினும் 27 வயதான தமக்கு ஏன் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வாய்ப்பளித்தார்கள் என்பது தெரிந்து கொள்ளாமலே மார்ச் 30 அன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார்.
தற்போது, அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பத்தினர், ஏன் 27 வயது இளைஞருக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், உடற்கூராய்வு முடிவு வெளிவரவும் காத்திருக்கின்றனர். ஏப்ரல் 11 அன்று, தலைவலி காரணமாக ஜாக் மருத்துவமனையை நாடியுள்ளார்.
முதற்கட்ட சோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்புடைய ரத்தக்கட்டிகள் காரணமாக ஜாக் இறந்திருக்கலாம் என்றே அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.
பிரித்தானியாவில் ஏப்ரல் 14 வரை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 21.2மில்லியன் மக்களில் 32 பேர்கள் ரத்தக்கட்டிகள் காரணமாக இறந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.