உணவகத்தில் 1000 பவுண்டுகளுக்கு மேல் சாப்பிட்டுவிட்டு மாயமான பிரித்தானிய தம்பதி: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
பல மாதங்களாக, பல உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மாயமான தம்பதி ஒன்று சிக்கிய நிலையில், தற்போது நீதிமன்றம் அவர்களுக்கு சிறை தண்டனை அறிவித்துள்ளது.
வாழ்வாதாரத்தை பாதிக்க செய்துள்ளது
மொத்தமாக இவர்கள் பல உணவகங்களில் ஆயிரம் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகைக்கு உணவருந்தியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து 41 வயதான Bernard McDonagh என்பவருக்கு 8 மாத சிறை தண்டனையும், இவரது மனைவி 39 வயதான Ann என்பவருக்கு 12 மாத சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
6 பிள்ளைகளுக்கு தந்தையான Bernard McDonagh தமது செயலில் வெட்கப்படுவதாகவும் அவமானப்படுவதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், இதுவரை உணவகங்களை ஏமாற்றிய மொத்த தொகையையும் தாம் திருப்பி செலுத்த இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி Paul Thomas KC, பல உணவகங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில், குறித்த தம்பதியின் நடவடிக்கை உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்துள்ளது என்றார்.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் Ann McDonagh என்பவரே முதன்மையான குற்றவாளி என விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தாம் கருதுவதாகவும், அவர் உண்மையில் பயிற்சிபெற்ற பொய்யர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டு திருட்டு சம்பவங்களில்
மே 8ம் திகதி ஸ்வான்சீ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக இந்த தம்பதி 1168 பவுண்டுகளுக்கு பல உணவகங்களில் உணவருந்தியுள்ளனர். Ann McDonagh மட்டும் பல கடைகளில் இருந்து சுமார் 1,017 பவுண்டுகளுக்கு பொருட்களை திருடியுள்ளார்.
மேலும் ஸ்வான்சீ பகுதியில் உள்ள ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்து 426.60 பவுண்டுகளுக்கு பொருட்கள் வாங்கிவிட்டு, பணம் தராமல் மாயமாகியுள்ளார். இன்னொரு அங்காடியில் இருந்து 400 பவுண்டுகள். மட்டுமின்றி, தெளிவாக திட்டமிட்டு இவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பலமுறை பல உணவகங்களிலும் கடைகளிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கடைசியாக கண்காணிப்பு கமெரா காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, அது பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |