டக் அவுட்டாகி வெளியேறிய கோபத்தில் இப்படியா செய்வது? தேவையில்லாத செயலால் சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்
ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறியதாக தினேஷ் கார்த்திக் மீது ஐபிஎல் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற தில்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் ரபாடா பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். போல்ட் ஆன அவர், ஓய்வறைக்குத் திரும்பும் முன்பு ஒரு ஸ்டம்பைக் கோபத்தில் தள்ளி விட்டுச் சென்றார்.
இதையடுத்து ஐபிஎல் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக அவர் மீது ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது தவறை தினேஷ் கார்த்திக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்ட நடுவர் முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.