Omicron அச்சுறுத்தல்... தென்னாபிரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த 50 விமானங்கள்
ஆபிரிக்காவில் Omicron தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்ட பின்னர், இதுவரை 50 விமானங்கள் தென்னாபிரிக்காவில் இருந்து பிரித்தானியாவில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபிரிக்க நாடான பொஸ்வானாவில் நவம்பர் 11ம் திகதி வீரியம் மிகுந்த புதிய கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது.
தற்போது Omicron என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்றானது, பொஸ்வானாவின் 6 பிராந்தியங்களில் வியாபித்துள்ளதுடன், ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த நிலையில், தென்னாபிரிக்கா, பொஸ்வானா, லெசோதோ, ஈஸ்வதினி, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் நேற்று தடை விதித்துள்ளார்.
ஆனால் நவம்பர் 11 முதல் நவம்பர் 26 வரை, கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து லண்டன் ஹீத்ரோவில் 48 நேரடி விமானங்கள் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில், ஒரு நாளைக்கு இரண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ஒரு விர்ஜின் அட்லாண்டிக் விமானமும் சேவையில் இருந்துள்ளன. ஒவ்வொரு விமானமும் 300 பயணிகளை ஏற்றி வந்துள்ளது என்றால், Omicron மாறுபாடானது முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து தென்னாபிரிக்காவிலிருந்து 14,400 பேர் பிரித்தானியாவுக்குள் வந்துள்ளனர் என்ற பகீர் தகவலை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
Omicron தொடர்பில் சர்வதேச நாடுகள் கடும் அச்சத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று இந்த விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களிடம் பேசுவார் என்றே தெரியவந்துள்ளது.