மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார் - பேருந்தில் பயணித்த போது திடீர் மாரடைப்பு
மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
விக்ரம் சுகுமாரன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார்.
இவர், பொல்லாதவன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, ஆடுகளம் படத்திற்கு வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதினார்.
அதன் பின்னர், கதிர், ஓவியா நடிப்பில் வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், 10 ஆண்டுகளுக்கு பிறகு, சாந்தனு, ஆனந்தி, பிரபு உள்ளிட்டோரை வைத்து இராவண கோட்டம் என்ற தனது 2வது படத்தை இயக்கினார்.
அடுத்து, ஏறுதழுவலை மையமாக கொண்ட ‘தேரும் போரும்’ என்ற படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்தார்.
மாரடைப்பு
இதற்காக மதுரையில், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி விட்டு, இரவு பேருந்தில் பயணம் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள விக்ரம் சுகுமாரனின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |