கவலைக்கிடமாக இருந்த ஆ.ராசாவின் மனைவி மரணம்! அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை-நோய் குறித்து வெளியான தகவல்
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி சற்று முன் காலமானார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவியை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தது திரும்பினார்,
இந்நிலையில், இன்று மாலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பரமேஸ்வரியின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கவலைக்கிடமானது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் இன்றும், மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.
அதன்பின்னர் பரமேஸ்வரியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை பரமேஸ்வரியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுக கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி.பரமேஸ்வரி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா அவர்களின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் திரு. ஆ.ராசா அவர்களின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி.பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஆ.ராசா அவர்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.