டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்பாக வெளியான ரசிகர்கள் எதிர்பார்த்த தகவல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நகரம் மட்டுமின்றி மாவட்டம், கிராமங்கள் அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். போட்டியை கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி 8 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விவரத்தை டி.என்.பி.எல். நிர்வாகத்துக்கு கடந்த 18ம் திகதிக்குள் அனுப்பி வைக்க கெடுவிதிக்கப்பட்டிருந்தது. இதன்படி சமர்பிக்கப்பட்ட அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அஜித்குமார், விக்ரம் ஜாங்கிட் ஆகியோரை விடுவித்துள்ளது. அருண், விஜயகுமார், ஆர்.சதீஷ், ராம் அர்விந்த், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், சந்தானசேகர், எம்.சித்தார்த், சுஜய், ஹரிஷ்குமார், அருண் குமார், பிரசித் ஆகாஷ், என்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், ராகுல் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் பெறப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் என்று மொத்தம் 19 பேர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கிங்ஸ் அணி டி.நடராஜன், ஷாருக்கான் அஷ்வின் வெங்கட்ராமன் உள்பட 18 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ் அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, ஷாஜகான், ரோகித் உள்பட 17 வீரர்களையும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் மற்றும் பெரியசாமி, கோபிநாத் உள்பட 15 வீரர்களையும் தக்க வைத்தது.
திருச்சி வாரியர்ஸ் அணி அனிருதா, ரஹில் ஷா, அந்தோணி தாஸ், முரளிவிஜய் உள்பட 19 வீரர்களையும், நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி பாபா அபராஜித், பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன் உள்ளிட்ட 15 வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், விவேக், ஹரிநிஷாந்த் உள்பட 18 வீரர்களையும், திருப்பூர் தமிழன்ஸ் அணி தினேஷ் கார்த்திக், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட் உள்பட 15 வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி அபினவ் முகுந்த், மொகித் பன்ஹால், சித்தார்த் அகுஜா, ரூபன்ராஜ், அபினவ் விஷ்ணு ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.