ஜேர்மனியில் பணியாற்றும் விருப்பம் உள்ளதா மக்களே?: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு
ஜேர்மனியில் பல்வேறு துறைகளில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், வரலாறு காணாத அளவில் ஜேர்மனியில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், காலியாக இருந்த பணியிடங்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில், 558,000ஆக உயர்ந்ததாக Competence Centre for Securing Skilled Labour (KOFA) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பொருள் என்னஎன்றால், மூன்றே மாதங்களில் மிகுதிறன் பணியாளர்கள் தட்டுப்பாடு 88,000 அதிகரித்துள்ளது என்பதாகும்.
ஜேர்மனியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, ஆண்டொன்றிற்கு அதற்கு சுமார் 400,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்கிறது பெடரல் வேலைவாய்ப்புத்துறை.
மொத்த தொழிலாளர் சந்தையிலும், அதாவது எல்லா வகை பணியிடங்களிலும் மிகுதிறன் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என KOFA அமைப்பு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், மருத்துவத்துறை, சமூக சேவைகள், கல்வி மற்றும் கட்டுமானத்துறை, கட்டிடக்கலை, பொறியியல் ஆகிய துறைகளில் அதிக அளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுபோக, தயாரிப்பு, உற்பத்தி, இயற்கை அறிவியல், புவியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, விவசாயம், வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளிலும் சராசரிக்கும் மேல் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
மேலும், சட்ட ஆலோசகர்கள், ஆடிட்டர்கள் முதலான பொருளாதாரத்துறைப் பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த பணிகள் தவிர்த்து, விழா அமைப்பாளர்கள், உணவகம், கஃபேக்கள், மதுபான விடுதி மேலாளர்கள் ஆகிய பணியிடங்களையும் நிரப்ப ஜேர்மனி ஆட்கள் தேடிக்கொண்டிருக்கிறது.
தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.