சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு வழக்கில் சிக்கிய பெண் மருத்துவர்: நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் பெரும் பின்னணி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பெண்ணுறுப்பு சிதைப்பு விவகாரத்தில் இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.
மிச்சிகன் மருத்துவரான Jumana Nagarwala 7 வயதேயான ஒன்பது சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், குறித்த நடைமுறையை தடை செய்யும் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என பெடரல் நீதிபதி ஒருவர் கடந்த 2018 நவம்பர் மாதம் தீர்ப்பளித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவர் Jumana Nagarwala குற்றமற்றவர் என கூறி விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது உண்மையான தரவுகளை அவர் மூடி மறைத்ததாக கூறி, தொடர்புடைய வழக்கில் மறு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில் கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸில் உள்ள மருத்துவர்களும் பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளதை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவர் ஃபக்ருதீன் அட்டருடன் மருத்துவர் நகர்வாலா மீதும் தொடக்கத்தில் பெண்ணுறுப்பு சிதைப்பு, சதி மற்றும் விசாரணைக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட வழக்குகளே பதியப்பட்டிருந்து.
மருத்துவர் ஃபக்ருதீன் அட்டர் என்பவரே தமது மருத்துவமனையில் பெண்ணுறுப்பு சிதைப்பு தொடர்பான அறுவை சிகிச்சைக்கு நகர்வாலாவை அனுமதித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் தற்போது விசாரணைக்கு இடையூறாக இருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மட்டுமே மருத்துவர் நகர்வாலா விசாரணையை எதிர்கொள்கிறார்.
அரசு தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள வாததில், நகர்வாலாவும் இன்னும் மூவரும் தங்கள் சமூகத்தில் இதுபோன்ற பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையை ரகசியமாக முன்னெடுக்க, தங்கள் சமூக மருத்துவர்களையும் ஊக்கப்படுத்தியதாகவும், விசாரணை ஏதும் முன்னெடுக்கப்பட்டால் பொய்யான தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
வியாழக்கிழமை நடந்த விசாரணையில், மருத்துவர் நகர்வாலா உட்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2017ல் சிறுமிகள் இருவரின் புகாரின் அடிப்படையில் மருத்துவர் நகர்வாலா கைது செய்யப்பட்டார்.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்ததுடன் தாவூதி பொஹ்ராஸ் என்ற இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்காக ஒரு மத நடைமுறையை மட்டுமே செய்வதாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.