ஸ்தம்பிக்கும் தலைநகரம்... ஓயாத மரண ஓலம்: கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தற்கொலை
இந்திய தலைநகர் டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பணிச்சூழலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மயானங்களில் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக நோயாளிகள் மரணமடைகின்றனர்.
டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி ஏற்பட்ட கொரோனா உயிர் பலிகளால், அவர் கடுமையான மன அழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர்,
கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.