கொரோனா தடுப்பூசி மாதவிடாயை பாதிக்கிறதா?; ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்
கொரோனா தடுப்பூசிகள், மாதவிடாயை பாதிக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வு ஒன்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது.
4,000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், கொரோனா தடுப்பூசி, மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பெற்ற ஆயிரக்கணக்கான பெண்களிடமிருந்து, மாதவிடாய் தொடர்பில் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, Oregon Health and Science University என்னும் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தலைமையில் 4,000 பெண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், மற்றவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள்.
அந்த ஆய்வில், முதல் டோஸ் தடுப்பூசியைத் தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி 0.64 நாட்கள், அதாவது, 15.36 மணி நேரம் அதிகரிப்பதும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியைத் தொடர்ந்து, மாதவிடாய் சுழற்சி 0.79 நாட்கள், அதாவது, 18.96 மணி நேரம் அதிகரிப்பதும் தெரியவந்தது.
அத்துடன், ஒரே மாதவிடாய் சுழற்சியின்போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற 358 பேருக்கு, சராசரியாக மாதவிடாய் சுழற்சி, இரண்டு நாட்கள் வரை அதிகரிப்பது தெரியவந்தது.
ஆறுதலளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால், கொரோனா தடுப்பூசியால் இந்த மாதவிடாய் சுழற்சி காலகட்டம் அதிகரித்தாலும், உதிரப்போக்கு இருக்கும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதுதான்.
ஆக, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மாதவிடாய் சுழற்சியில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பெண்கள் திட்டமிடும் வகையில் அவர்களுக்கு ஆலோசனை அளிக்க இந்த ஆய்வு உதவுகிறது எனலாம்.
இந்த ஆய்வில், பைசர் (55 சதவிகிதம்), மொடெர்னா (35 சதவிகிதம்) மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் (7 சதவிகிதம்) ஆகிய தடுப்பூசிகள் பெற்றவர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
என்றாலும், பொதுவாக எல்லா ஆய்வுகளும் சொல்வதுபோல, இந்த ஆய்வும் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், ஒரு முழு ஆண்டுக்கு இந்த ஆய்வு தொடர் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.